முல்லை வீரமங்கைக்கு ‘அடங்காமை’ திரைப்படக்குழு உதவிக் கரம்!

சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு ‘அடங்காமை’ திரைப்படக்குழு (வோர்ஸ் பிக்சர்ஸ்) சன்மானம் வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சார்பில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பின்தங்கி வரும் நிலை என்பதை முறியடித்த பெண்கள் வரிசையில் இன்று இந்துகாதேவியின் சாதனை மிகப்பெரியது.

நாளை 28ஆம் திகதி இலங்கை திரையரங்குகளில் வெளியாகும் தென்னிந்திய முழு நீளத்திரைப்படமான ‘அடங்காமை’ திரைப்படத்தின் (வோர்ஸ் பிக்சர்ஸ்) தயாரிப்பாளர்களான பொன். புலேந்திரன், மைக்கேல் ஜான்சன், கதாநாயகன் சரோன் ஆகியோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.

நாளை திரைப்படம் வெளியாகும் நிலையில் இந்தச் சாதனைப் பெண்ணுக்கு திரைக்குழுமம் சார்பாக (வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பளர்கள்) ஒரு இலட்சம் (100,000 ) ரூபாவை அவர்கள் வழங்கி கெளரவப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி அவரது உயர்கல்வி நடவடிக்கைகளுக்கான தொடர் முயற்சிகளுக்கும் தங்கள் உதவிகளை வழங்குவோம் எனவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் கணேஷ் இந்துகாதேவி தனது திறமை மீது கொண்ட நம்பிக்கையை உரமாக்கி இன்று இந்தச் சாதனையைப் படைத்து நாட்டுக்கும் முல்லைத்தீவு மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில், 25 வயதுக்குட்பட்ட 50 – 55 கிலோகிராம் எடைப்பிரிவுப் போட்டியில் வென்று தங்கப் பதக்கம் வென்றுள்ள எங்கள் வீரமங்கை கணேஷ் இந்துகாதேவிக்கு அடங்காமை திரைப்படக் குழு சார்பாக தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று திரைக்குழு உறுப்பினர்களும், கதாநாயகன் சரோனும் இந்துகாதேவியின் இல்லத்துக்குச் சென்று வாழ்த்தி விடைபெற்றுள்ளனர்.

Leave a Reply