மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார ஊழியர்கள் மூவர் வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.
வாத்துவ, ஹபரலகஹலந்த பிரதேசத்தில் வசிக்கும் தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹபரலகஹலந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பல மாதங்களாக மின்சார கட்டணம் செலுத்தாமை தொடர்பில் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டதன் காரணமாக தனியார் மின்சார நிறுவன ஊழியர்கள் மூவர் மின்சாரத்தை துண்டிக்க வீட்டுக்குச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் வீட்டுக்கு வந்ததாகவும், சந்தேக நபர் மூன்று மின்சார ஊழியர்களை தாக்கி மீண்டும் வலுக்கட்டாயமாக மின்சாரத்தை எடுத்து அனுப்பி வைத்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான மின்சார ஊழியர்கள் மூவரும் பொலிஸாரிடம் வந்து முறைப்பாடு செய்து பொலிஸாருடன் சென்று மின்சாரத்தை துண்டித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.