சுகாதார சீர்கேட்டால் யாழ்ப்பாண நகரில் இரு உணவகங்களுக்கு சீல் வைப்பு! samugammedia

யாழ்ப்பாணம் பிரதான நகர் பகுதியில்  சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களை நீதிமன்ற அனுமதியுடன் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம், பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை  யாழ்ப்பாண நகர் பகுதி உணவகங்கள் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய யாழ்ப்பாண பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும், யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும் பொது சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையில் சிக்கின. 

இரு உணவக உரிமையாளர்களிற்கும் எதிராக இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ்ப்பாண நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கினை விசாரணை செய்த நீதவான் உணவக உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் பிணையில் விடுவித்ததுடன், குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களை சீல் வைத்து மூடுமாறு கட்டளை வழங்கிய நிலையில்  வழக்கினை 18.10.2023ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் இதனை தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகங்கள் இரண்டும் இன்று  புதன்கிழமை சீல் வைத்து மூடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *