பலஸ்தீன் – காஸா மக்களின் அனைத்து உரிமைகளும் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டு , அங்கு நிரந்தர சமாதானம் உருவாக வேண்டி அதிகமாக பிரார்த்தனை செய்வோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம் – லயன்ஸ் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலமாக்கள் – ஹாபிழ்களுக்கிடையில் அகில இலங்கை ரீதியிலான இரவு , பகல் கிரிக்கெட் சுற்றுப்போட்டி முந்தல் , அக்கரவெளி எவர் கிரீன் விளையாட்டு மைதானத்தில் நேற்றுஇடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேற்கத்தேய நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆயுத பலத்தையும், பண பலத்தையும் ஒன்று சேர்த்து பலஸ்தீன் மக்களை தாக்கி, அநியாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சிறுவர்கள், வயோதிபர்கள் , கரப்பிணித் தாய்மார்கள் என்றுகூட பார்க்காமல் எந்த உள்ளங்களும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அந்த மக்களை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உண்பதற்கு உணவு இல்லாமல், குடிப்பதற்கு குடிநீர் இல்லாமலும் , தமக்குத் தேவையான மருத்துவ வசதி மற்றும் மின்சார வசதி இல்லாமலும் அந்த மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்த போரின் உச்சத்தால் தமது குடும்பங்களை, உறவுகளை இழந்து வேதனைப்படுகிறார்கள்.
எனவே, பலஸ்தீன மக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த மக்களுக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுக்கும் காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக எங்களால் முடிந்த அளவில் அழுத்தங்களை வழங்கி வருகிறோம்.
எனவே, பலஸ்தீன மக்களது வெற்றிக்காகவும், மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலைக்காகவும் நோன்பு நோற்று, அதிகம் துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமறும் இலங்கை முஸ்லிம் மக்களிடத்தில் அன்பாக கேட்டுக் கொள்கிறேன் என்றார்.