தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி…! வாழ்வாதாரத்தை இழந்த இலங்கை மீனவர்கள்…! நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு மகஜர்…!

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையும் அவர்களின் இழுவைமடி தொழில் முறையினாலும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் அதிகாரத்தை பயன்படுத்தி விரைவான நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமருக்கு வடமாகாண கடற்தொழில் இணையத்தினரால் கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண கடற்தொழில் இணையத்தின் ஏற்பாட்டில் யாழில் இன்று(05)  காலை இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணியின் பின்னர் இந்திய பிரதமருக்கான மகஜர் யாழிலுள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட மகஜரிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் வட மாகாணத்தில் சுமார் இரண்டு இலட்சம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலையே நம்பி வாழுகின்றனர்.

மேலும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இம்மீன்பிடி தொழிலை நம்பிய வாழ்வாதார தொழில்களில் தங்கி வாழ்ந்து வருகின்றனர்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக அனைத்து வாழ்வாதார கட்டமைப்புக்களும் சீர் குலைந்துள்ள நிலையில், மீன்பிடி ஒன்றே தற்போது நம்பிக்கை தரும் தொழிலாக உள்ளது. 

இந்த தொழிலிற்கும் இந்திய மீனவர்களின் மீன்பிடி முறைகளினால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் எமது நாட்டின் கரையோரம் வரை வந்து எமது கடல் வளங்களையும் கடல் வாழ் உயிரினங்களையும் அழிக்கும் இழுவைமடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இந்திய மீனவர்களின் இந்த சூழல் விரோத மீன்பிடி முறைமை காரணமாக எமது மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் மீன்பிடி வலைகள் சேதமாக்கப்பட்டு எம் மீனவர்களின் நாளாந்த வருமானத்தினையும் இழந்து வருகின்றனர்.

இரு நாட்டு மீனவர் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பல கட்டங்களில் இதுவரை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. 

அந்த வகையில் 05.11.2016 தங்களின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுபராஜ், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் இரு நாட்டின் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பங்கேற்புடன் எட்டப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த தங்களின் மேலான அதிகாரத்தை பயன்படுத்தி விரைவான நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளையில், இலங்கையின் பொருளாதார மற்றும் பல்வேறு நெருக்கடிகளில் இந்திய தேசம்இ கரம்கொடுத்து உதவிவரும் சந்தர்ப்பங்களையும் நன்றியுணர்வோடு நினைவு கூறுகின்றோம் என்று குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *