பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பத்து ஆண்டுகள் சிறை…!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட    (52) வயதுடைய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவால் இத்தீர்ப்பு இன்று(13) வழங்கப்பட்டது.

கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு குறைவான பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாடசாலை சிறுமியின் ஊடாக  பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து , குறித்த நபர்மீது நானு ஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

அதன்பின்னர் அவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் வழக்கிற்கான தீர்ப்பு இன்று(13)  வழங்கப்பட்டது.

இதன்போது சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளியாக இனங் காணப்பட்ட 52 வயதுடைய நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

அத்துடன், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இந்த தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்காத பட்சத்தில் மேலும் மூன்று வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

குற்றவாளி நீதிமன்ற தண்டனை பணமாக 15 ஆயிரம் ரூபா செலுத்த உத்தரவிட்ட நீதிபதி , இந்த தண்டனை பணத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *