நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்தவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அம்பாறை பெரிய நீலாவணை பாண்டிருப்புப் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சிகாய்ச்சி பரிமாறப்பட்டு வடக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று காலை கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பெரியநீலாவணை பொலிஸார் கல்முனை நீதவான் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து குறித்த நிகழ்வினை நிறுத்துமாறு கூறயுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் என்பவருக்கு தடை உத்தரவு உள்ளதாகவும் குறித்த நிகழ்வினை நிறுத்துமாறு கூறி தடை உத்தரவை வழங்கினர்.

அத்துடன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி ஆகியோருக்கும் பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்ந்த குற்றச்சாட்டில் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *