
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் விரைவில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்களை திறக்க உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வத்தகதுறை அமைச்சர் பந்துல குணவர்த்தன யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் மற்றும் வர்த்தகம் சம்பந்தமான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வடபகுதியில் உணவு பற்றாக்குறை மற்றும் உணவுத் தட்டுப்பாட்டை நீக்கும் முகமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக 20 சதொச விற்பனை நிலையங்களை விரைவில் திறக்க உள்ளோம்.
அவ்வாறு திறப்பதன் மூலம் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளமுடியும் அத்தோடு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள உணவு களஞ்சிய சாலைகளில் அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்து சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதன் மூலம் பொதுமக்கள் இலகுவாக தமது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1930 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட அபாயகரமான ஒருபொருளாதார நிலையே தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய் காரணமாக பல வல்லரசு நாடுகளிலும் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எமது நாட்டிலும் இந்த கொரோனா சூழ்நிலையின் காரணமாகவே பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் தற்போது பொருளாதார சூழ்நிலை காணப்படுகின்றது பல தொழில் தொழில் வாய்ப்புக்களை இழந்து உள்ள நிலை காணப்படுகின்றது.
உற்பத்திகள் தடைப்பட்ட நிலையும் காணப்படுகின்றது சகல துறைகளிலும் இந்த கொரோனா நோயானது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா உக்ரேன் யுத்தத்தின் காரணமாக எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் விலையும் அதிகரித்து நிலை காணப்படுகின்றது.
எனினும் தற்போது நாட்டின் ஜனாதிபதியின் இயற்கை விவசாய முறையை மக்கள் பயன்படுத்த தொடங்கியதன் காரணமாக விவசாய உற்பத்தியில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் அனைத்து நாடுகளில் பொருளாதார தாக்கமானது அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது.
எமது உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நமது நாட்டில் உணவுத் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என்றார்.





