போராட்டத்திற்க்கு வந்தவர்களை பேருந்தில் இருந்து இறங்க விடாது தடுத்த பொலிஸார் – யாழில் பரபரப்பு !!

யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள், வீதியில் வழிமறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில் குறித்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டது.

அதில் கலந்து கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பேருந்தில் வருகைதந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகில் பொலிஸார் வழிமறித்தனர்.

அத்தோடு வாகனத்தில் இருந்து எவரையும் இறங்க விடாதவாறு, வாகனத்தின் இரு வாசல்களிலும் காவலுக்கு நிற்கும் நிலையில், சாரதியை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதேவேளை பொலிஸாரின் காவலையும் மீறி பேருந்தில் இருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய நிலைய பகுதியில் பெருமளவான பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply