வவுனியா மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையானது 5885 ஹக்டயரில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை வவுனியா மாவட்டத்தில் 5885 ஹக்டயர் அளவில் சிறு போக நெற் செய்கையினை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், தற்போது வரை 2000 ஹக்டயர் வரை நெற் செய்கை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெரும்போக நெற்செய்கையின் போது இரசாயன உரம் மற்றும் கிருமி நாசினிகளிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதனால் சிறந்த விளைச்சல் இன்மை காரணமாக விவசாயிகள் பெரும் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போது சிறுபோக நெற் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேதன பசளையினை பயன்படுத்தி சிறுபோக செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள நிலையில், கமநல சேவை நிலையங்கள் ஊடாக சேதன பசளைகள் உரிய நேரத்தில் விவசாயிகளிற்கு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.
இருந்த போதும் கமநல சேவை நிலையங்களிற்கு தேவையான சேதன பசளைகள் உரிய முறையில் கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாக சேதன பசளைகளை உரிய நேரத்தில் விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.







