ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடியாது: சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்போம்! – கஜேந்திரகுமார் எம்.பி. திட்டவட்டம்

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்று ஒட்டுமொத்தமான மக்களின் வெறுப்பினைச் சந்தித்து வீழ்ச்சி கண்டுள்ள ராஜபக்ஷக்களுக்கு உயிர்கொடுக்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பினை கையிலெடுத்து இரண்டு ஆண்டுகளாகின்றபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்கே தயக்கம் காண்பிக்கின்றார்கள். அதுமட்டுமன்றி நாட்டில் இனப்பிரச்சினையே இல்லையென்று கூறியும் வருகின்றார்.

இதனைவிடவும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களை தேடி போராட்டங்களைச் செய்து வருகின்ற நிலையில் காணாமலாக்கப்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா தருவதாக கூறி மக்களின் வேதனையுடன் விளையாடுகின்றார்கள்.

அதேபோன்று பயங்கரவாததடைச்சட்டத்தினை திருத்துவதாக கூறினாலும், நீண்டகாலத்திற்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது தடுத்து வைத்தல் உள்ளிட்ட முக்கியமான விடயங்களை கைவிடுவதற்கு தயதராக அவர்கள் இல்லை. வெறுமனே கண்துடைப்புக்கானதொரு செயற்பாடாகவே பயங்கரவாத சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முயற்கின்றனர்.

அதேநேரம், இனப்படுகொலையையும், மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்களையும் புரிந்துள்ள ராஜபக்ஷ அரசாங்கம் அவற்றுக்கான பொறுப்புக் கூறலைச் செய்வதற்கு தயாராக இல்லை.

அண்மைய நாட்களில் அரசாங்கம் பொருளாதார நெருக்கள் காரணமாக அரசாங்கத்தின் மீது அனைத்து இன மக்களும் வெறுப்பினையே வெளிப்படுத்தியுள்ளனர்.

இத்தகையதொரு தருணத்தில் நாம் மாநாட்டில் பங்கேற்பதானது வீழ்ச்சி கண்டிருக்கும் ராஜபக்ஷ குடுத்பத்திற்கு மீண்டும் புத்துயர் அளிப்பதற்கு நிகரானதாக மாறிவிடும்.

ஆகவே, இவ்விதமான பின்னணிகளைக் கொண்டவர்கள் கூட்டும் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில் தமிழ் மக்களுக்கு எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போதில்லை.- என்றார்.

Leave a Reply