இஸ்ரேலில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு- 10பேர் காயம்!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும், காயமடைந்தவர்களில் ஒரு பெண் உட்பட 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான அதிகாரிகள், மோப்ப நாய்கள் மற்றும் இராணுவ சிறப்புப் படையினர், மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புப் பகுதிகள் வழியாக தேடுதல் நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.

இதன்போது, இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை யாஃபாவில் உள்ள மசூதிக்கு அருகே, துப்பாக்கி ஏந்திய சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கி ஏந்தியவர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையைச் சேர்ந்த பாலஸ்தீனியர் என்றும், அவர் மட்டுமே சந்தேக நபர் என்றும் அதிகாரிகள் கூறினர்.

டெல் அவிவ் பொலிஸ் கமாண்டர் அமிச்சாய் எஷெட் கூறுகையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வியாழன் இரவு 9 மணியளவில் நெரிசலான மதுக்கடையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறினார்.

Leave a Reply