வடக்கில் கொரோனோவால் 15 நாளில் 225 பேர் மரணம்!

வடக்கில் நேற்று 200 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 667 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்த நிலையில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களில் 225 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையின் படி, நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42 தொற்றாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 59 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 64 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 25 தொற்றாளர்களும் மன்னாரில் 10 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 பேரும் வவுனியா மாவட்டத்தில் 4 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா இருவரும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 33 ஆயிரத்து 737 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 634 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 618 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 356 பேர் உயிரிழந்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *