கொழும்பு, ஏப் 16
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கத்திடம் சட்ட உதவிகளை கோரியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில், கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும், தலா இரண்டு கோடி ரூபா, ரொக்கப் பிணையில் செல்லுமாறு அண்மையில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் தமது கடிதத்தில் கருத்துரைத்துள்ள மு.க.ஸ்டாலின், தமிழக மீனவர்களால் அவ்வளவு பாரிய கட்டணத்தை செலுத்த முடியாதென குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கத்தின் உதவியை கோருவதாகவும் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த மார்ச் மாதம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பான, தமிழக முதலமைச்சரின் இடைவிடாத கோரிக்கையை இலங்கை அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சரும் நல்லெண்ணத்துடன் அணுக வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையையும் மனதில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.






