கடற்படையினரின் அராஜகமானது அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது- சார்ள்ஸ்

மன்னார்- வங்காலைபாடு  கிராமத்தில் இருந்து கடற்றொழிலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை, மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் கடுமையாக  தாக்கியுள்ளனர்.

அதனை நேரில் பார்த்த கிராம சேவகர் ஒருவர், அவரை ஏன் தாக்குகின்றீர்கள் என கடற்படையினரை கேட்கசென்றபோது, 10க்கும் மேற்பட்ட கடற்படையினர் சேர்ந்து அக்கிராம சேவகரையும் தாக்கியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றபோது, முறைப்பாட்டை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் உடனடியாக அவர்களின் உடல்நலம் கருதி பேசாலை வைத்தியசாலையில் ஏனையோர் அனுமதித்தப்போது, மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு  நேரில் சென்று நிலைமைகளை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளதாவது, “கடற்படையினரின் இந்தஅராஜகமானது தற்போது இருக்கும் அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவமானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆகவே அதற்கு எனது  கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply