மட்டக்களப்பில் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

மட்டக்களப்பு  – கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழியில் தோண்டி கிறவல் அகழப்பட்டு வருகின்றது.

இந்த கிறவல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்,மட்டக்களப்பு மண்  ராஜபக்ஷக்களின் கூடாரமா என்ற பதாதைகளுடன் சிறுவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த காணிக்கு உரிமை கோரி ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அதிகளவான பகுதியில் கிரவல் தோண்டப்பட்டு பெரிய அளவிலான மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது குறித்த காணியில் பயன்தரும் மாம்பழம்,மாதுளை மரம், மரவள்ளி போன்ற பயிர்கள் செய்கை பண்ணப்பட்டுள்ளது என சுமார் 30 பேர் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் பயிர் செய்கை பண்ணுவதற்காக பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததுடன் ,தற்போது அரச காணியில் எவ்வாறு பயிர் செய்ய முடியும் என பிரதேச செயலாளர் கேட்பதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சந்திவெளியில் உள்ள ஒரு தனி நபருக்கு கிரவல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கிறவல் அகழ்விற்கு எதிராக வாழைச்சேனை பொலிஸில் ஆறு பேருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக பிரதேச செயலாளரை வினவியபோது,குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *