அஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு – பொலிஸார் வௌியிட்ட முக்கிய தகவல்! samugammedia

காலி, அஹுங்கல்ல பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரசவம் முடிந்து பலபிட்டிய வைத்தியசாலையில் இருந்த மனைவி மற்றும் பிறந்த குழந்தையைப் பார்க்க சென்று மீண்டும்  திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை காரில்  வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு கைத்துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் 38 வயதான சுபுன் விதுர தாரக என தெரிவிக்கப்படும் நிலையில், கழுத்து மற்றும் கை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த அவர் பலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் போலி இலக்கத் தகடுகள் கொண்ட கார் ஒன்று பெந்தர தெத்துவ பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மோப்ப நாய் விசாரணைக்காக பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாய் அப்பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றுக்கு சென்று நின்றதாகவும், அங்கு எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ்கொட சுஜீயின் உறவினர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், கந்து வட்டிக்காரரான இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நபர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் தகராறு ஏற்பட்டதாகவும், கடந்த காலங்களில் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தென் மாகாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பெரும்பாலானவை கூலிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றக் கும்பல்களில் இது ஒரு புதிய போக்காக மாறியுள்ளது என்றும், இவ்வாறு பயன்படுத்தப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் என்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply