கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி, சேவையை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணொருவர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ, கோரல்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய திருமணமாகாத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று (23) காலை 01.17 மணியளவில், அவர் கட்டார் ஏர்வேஸ் விமானம் (KR-662) மூலம் கட்டாரின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார், விமானம் இலங்கைக்கு வந்து கொண்டிருந்தபோது இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.
சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.