
கொழும்பு, மார்ச் 29
2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அந்த மனு இன்று (29) பிற்பகல் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர, பி. குமரன் இரத்தினம் ஆகியோர் அடங்கிய குழுவினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
28.02.2016 அன்று இரவு ராஜகிரியவில் உந்துருளியில் பயணித்த சம்பத் குணவர்தன என்ற இளைஞனை மோதி காயமடைய செய்தமை தொடர்பில் அப்போதைய அமைச்சராக இருந்த பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக இருந்த துசித குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியும் தற்போதைய உதவி பொலிஸ் அத்தியட்சகருமான சுதத் அஸ்மடல ஆகியோர் மீது சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இடைநிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி தாக்கல் செய்த மனு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டது.





