
இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் –இவ்வாறு தெரிவித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
5 ஆயிரம் குளக்கட்டுகளை சீரமைக்கும் ஆரம்ப நிகழ்வு குருநாகலில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இன்று நாம் மிகவும் சிரமப்படுகிறோம். ஒரு நாடாக நாம் ஒரு தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து வருவதுடன், வரலாற்றில் மிகவும் சவாலான நேரத்தை எதிர்கொள்கிறோம். உள்ளூர்வாதத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டமே எங்கள் நோக்கம். இத்திட்டம் யதார்த்மாகும்போது விவசாயப் பொருளாதாரத்தை மட்டுமன்றி கிராமியப் பொருளாதாரத்தையும் பலப்படுத்த முடியும்.
இன்று மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதை நாம் அறிவோம். இவை நமக்குத் தெரியாதா? அல்லது அறிந்தும் அறியாதது போன்று உள்ளார்களா என்று சிலர் கேட்கிறார்கள். அதனால்தான் அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டி நாட்டைப் பற்றி சிந்தித்து, அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்து, இந்த நிலையிலிருந்து மீண்டெழுவதற்கான தளமொன்றை நிர்மாணித்தோம். கொரோனாத் தொற்று எம்மால் உருவாக்கப்பட்டது அல்ல.
நாங்களே அதனைச் செய்தோம் என்று மக்களைத் தூண்டிவிட சிலர் முயற்சிப்பதைப் பார்த்தேன். எதிர்க்கட்சியில் இருந்தாலும் நல்ல யதார்த்தமான யோசனைகளை முன்வைக்க தயாராகவுள்ளோம். இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. ஒவ்வொருவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் இது –என்றார்.
மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் இரண்டு ரூபாவால் எரிபொருள் விலை அதிகரித்ததைக் கண்டித்து மஹிந்த போராட்டங்களை முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





