
கொழும்பு, ஏப் 16
நாட்டில் இடம்பெறும் அமைதியான மக்கள் போராட்டங்கள் குறித்து ஊழல் ஆட்சியாளர்கள் விடுக்கும் சட்டவிரோத உத்தரவுகள் குறித்து பாதுகாப்பு செயலாளரும் இராணுவ தளபதியும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என சரத்பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது முகநூல் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைக்கு எனது உத்தரவின் கீழ் நீங்கள் படையணிகளிற்கு தலைமை தாங்கினீர்கள். ஆகவே நாட்டில் உருவாகியுள்ள பொதுமக்கள் போராட்டம் குறித்து ஊழல் ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படும் சட்டவிரோத உத்தரவுகளை நீங்கள் புறக்கணிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
உயிர்வாழ்வதற்கான போராட்டத்திற்காக மாத்திரம் சிவில் சமூகத்தின் மீது அழுத்தம் திணிக்கப்பட்டுள்ளது இந்த நிலை ஊழல் மிகுந்த திறமையற்ற நிர்வாகத்தினாலேயே ஏற்பட்டுள்ளது.
இதுவே அமைதியான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. தங்கள் அதிகாரத்தை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக ராஜபக்ச அரசாங்கம் பொதுமக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதனை சர்வதேச சமூகம் கடுமையாக கண்டிக்கும். மனிதாபிமான நடவடிக்கைகக்கு தலைமைவகித்த யுத்தவீரர்கள் எவரும் அவமானப்படுவதை தான் விரும்பவில்லை என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.





