
ஆசிரியர் இடமாற்றங்கள், இடமாற்ற மேன்முறையீட்டு சபையில் பரிசீலிக்கப்பட்டு முறையான வகையில் நடைமுறைப் படுத்தப்படும் என்ற உறுதிப்பாடு கிடைத்துள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்க உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
ஆளுநர் அலுவலகத்தில் , கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் ஆளுநரிற்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்த அதிகாரிகள், உதவிச் செயலாளர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது.
வெளிமாவட்டத்தில் இருந்து வருகின்ற ஆசிரியர்கள் தொடர்பாக அதில் கலந்துரையாடப்பட்டது.
பதிலீட்டு அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களிற்கு ஆசியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மூன்று வருடங்கள் சென்றும் இன்னமும் அவர்கள் மீள இங்கு அழைக்கப்படவில்லை.
இதனை கண்டித்து நாளைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.
எனினும் கல்வியமைச்சின் செயலாளர், இடமாற்ற மேன்முறையீட்டு சபையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்குரிய இடமாற்றம் வழங்கப்படும் என்ற உத்தரவாதமளித்துள்ளார்.
எனவே நாளை நடைபெறவிருந்த போராட்டம் எதிர்வரும் 25 ம் திகதி மேன்முறையீட்டு சபை நடைபெறும்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.





