
நாட்டில் இன்று முதல் புதிய பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொழும்பிலிருந்து கண்டி வரையில் அதிவேக சொகுசு ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொழும்பிலிருந்து கண்டிக்கு ஒவ்வொரு நாளும் அதிகாலை 5.20 அளவில் புறப்படும் குறித்த ரயில் முற்பகல் 8.20 அளவில் கண்டிபிரதேசத்தை சென்றடையும் எனவும், மாலை 4.50 க்கு கண்டியிலிருந்து புறப்படவுள்ள ரயில் இரவு 7.40 க்கு கொழும்பு நகரை வந்தடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவிசாவளை – வக ரயில் நிலையத்திருந்து காலை 6.20 க்கு புறப்படும் ரயில் சேவை, 8.12 அளவில் கொழும்பினை வந்தடையவுள்ளதுடன் மாலை 4.00 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படவுள்ள ரயில் 5.43 க்கு வக ரயில் நிலையத்தினை வந்தடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பிலிருந்து காங்கேசன் துறை வரை பிரதி வெள்ளிக்கிழமைகளிலும், காங்கேசன் துறை முதல் கொழும்பு வரை ஞாயிற்றுக்கிழமைகளிலும் வார இறுதி ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரையும், அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரையும் அதிவேக சொகுசு ரயில் சேவையொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் பாடசாலை சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளமையினால் பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க சிசுசெரிய போக்குவரத்து திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று முதல் மேலும் 20 புதிய பஸ் சேவைகளை சிசுசெரிய திட்டத்திற்குள் உள்வாங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், Park & Ride பஸ் சேவை திட்டத்தினையும் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்