அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டம்-ரஹ்மான் எம்.பி எச்சரிக்கை!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக மீண்டுமொறு மக்கள் எழுச்சி போராட்டம் ஆரம்பமாகப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. 

அரசாங்கத்திற்கு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தேவை கிடையாது. மாறாக நாட்டைக் கட்டியெழுப்புவதைப் போன்று போலி நாடகமே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஒருபுறம் சர்வகட்சி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுபுறம் இளைஞர்களுக்கு எதிரான அடக்குமுறையைப் பிரயோகித்துக் கொண்டிருக்கிறார். 

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதே , தற்போது பொலிஸாரின் பிரதான கடமையாகவுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு போலியாக , சர்வகட்சி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அரசாங்கத்திற்கு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தேவை கிடையாது. நாட்டைக் கட்டியெழுப்புவதைப் போன்று போலி நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. 

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதிலும் இது தாக்கம் செலுத்தும். காரணம் சர்வதேச நாணய நிதியம் என்பது தனியொரு நிறுவனம் அல்ல. மேற்குலக நாடுகள் பல அதில் அங்கத்துவம் வகிக்கின்றன.

இந்த நாடுகள் இலங்கை மீது தொடர்ந்தும் அதிருப்தி கொள்ளுமாயின் , அது எமக்கு பாரிய அழுத்தமாக அமையும். அரசாங்கம் நாட்டை மேலும் மேலும் வீழ்ச்சியடைச் செய்வதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. 

ஜனாதிபதி செயலகத்திலும் நீச்சல் தடாகத்தில் நீராடியவர்களையும் , அங்குள்ள கட்டிலில் உறங்கியவர்களையும் கைது செய்வதில் காண்பிக்கும் ஆர்வத்தை, ஊழல் மோசடிகள் தொடர்பில் எம்மால் சீ.ஐ.டி.யில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரிப்பதில் காண்பித்தால் நாடு முன்னேற்றமடைந்து விடும்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பயங்கரவாதிகளென்ற முத்திரை குத்தப்படுகிறது. பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக குரல் கொடுத்த மக்கள், இவ்வாறான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் எழுச்சி போராட்டங்களை முன்னெடுக்கப் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *