யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி அவசரமாக கூடவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் கொரொனா தொற்றுக்குள்ளவோரின் எண்ணிக்கை சற்று குறைவடைந்து காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வாரத்திலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக, யாழ் மாவட்ட கொரோனா செயலணியானது எதிர்வரும் செவ்வாய் காலை 10 மணிக்கு கூடி தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயவுள்ளது.
யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரின் தலைமையில், சுகாதாரப் பிரிவினர் மற்றும் ஏனைய துறைசார் அதிகாரிகளுடன் குறித்த செயலணி கூட்டம், யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக டெங்கு தொற்று நிலைமை மற்றும் அனர்த்த முகாமைத்துவ விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.