தமது பிரதேசத்தில் தேங்கி நிற்கும் வெள்ளம் காரணமாக, முறையான வடிகாலமைப்பை ஏற்படுத்தித் தருமாறு யாழ். காக்கைதீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையினால், பல்வேறு இடங்களிலும் வெள்ள அனர்த்தங்கள் இடம்பெறுள்ளதோடு, பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டும், இடம்பெயர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில், காக்கைதீவு பகுதியில் வாழும் மக்கள் ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
பல இடங்களிலும் இருந்து வருகின்ற வெள்ள நீரானது, தமது பகுதியின் ஊடாகவே கடலுக்கு செல்வதாக தெரிவித்ததோடு, ஒழுங்கான வடிகாலமைப்பு வசதி இன்மையினாலையே தமது குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பிலும் இருந்து உணவுப்பொதிகள் வழங்கப்படுகின்றன.
ஆனாலும் வருடாவருடம் தாம் எதிர்நோக்குகின்ற இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை யாரும் பெற்றுத் தரவில்லை என சுட்டிக்காட்டினர்.
எனவே, காக்கைதீவு பகுதியில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை, முறையான விதத்தில் கடலுக்கு செலுத்துவதற்குரிய வடிகாலமைப்பு வசதியை ஏற்படுத்தி தருமாறு மேலும் தெரிவித்துள்ளனர்.