சர்வதேச ரீதியில் இலங்கையை ஓரங்கட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் காரணமாக அமையும்! – கரு

ஜனநாயகம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி அரசியல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை நசுக்குவது மகவும் மோசமான நிலை என்றும் மேலும் நாட்டை சர்வதேச ரீதியாக ஓரங்கட்டப்படுவதற்கு காரணமாக அமையும் என்று நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அனைத்து பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைப்பாளர் உட்பட சிவில் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் குழுவொன்றை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசியலமைப்புகள் குடிமக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளையும், கருத்து வேறுபாடுகளையும் மதித்து ஒரு சிறந்த நாட்டை நம்பும் நாகரிக சமூகம் அத்தகைய நிலையை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாடு தற்போது பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

இவ்வாறான சூழலில் எமது நாட்டிலும் சர்வதேச சமூகத்தினரிடையேயும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்திய பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற அதீத சட்டங்களை நாம் தொடர்ந்தும் ஏற்றுக்கொண்டால் அது நிச்சயமாக நாம் ஒரு நாடாக சர்வதேச ரீதியாகவும் ஓரங்கட்டப்படுவதற்கு காரணமாக அமையும். இவ்வாறான செயற்பாடுகள் எமது நாட்டிற்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

சிவில் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை ஒடுக்குவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற அதீத சட்டங்களை நியாயப்படுத்தக் கூடாது.

அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பதிலாக அனைத்துத் தரப்பினரிடமும் நட்புக்கரம் நீட்ட வேண்டும். அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட திட்டத்துடன் மிகக் குறைந்த நேரத்தை இலக்காகக் கொண்டு அதிகாரப் போட்டியின்றி ஒருமித்த திட்டத்தை அணுக வேண்டும் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *