
நாட்டுக்கு தேவையான 4 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்து பொருட்களை வழங்குவதாக உறுதியளித்து உலக சுகாதார ஸ்தாபனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இலங்கை மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 4 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்படும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்யும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விநியோகிப்பதற்கான திகதிகள் உள்ளிட்ட விபரம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவினால் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார அழுத்தத்தை உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்றுக்கொள்வதாகவும், இந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் அதன் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் அத்தியவசிய சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான அவசர உதவிகளை வழங்க, அவசரகால திட்டத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அத்தியவசிய மருத்துவப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சுகாதாரக் கட்டமைப்பின் செயல்திறன் மற்றும் தாங்கிக்கொள்ளும் திறன் உள்ளிட்ட மக்களுக்கு ஏற்படும் சுகாதார பிரச்சினைகளை உலக சுகாதார ஸ்தாபனம் உன்னிப்பாகக் கண்காணிப்பதாகவும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாகவும் வைத்தியர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் மேலும் தெரிவித்துள்ளார்.