நல்லை கந்தன் சப்பர திருவிழா அன்று .சிவயோகர் சுவாமி தவம் இயற்றிய நல்லூர் தேரடி வில்வ மரத்தடியில் சிவ தியானத்துடன் சைவமுரசு
தமிழ்ச் சைவப் பேரவை வெளியீடாக மலர்ந்தது.
பேரவை தலைவர் மேனாள் நீதிபதி வசந்தசேனன் வெளியிட்டு வைக்க தவத்திரு உமாபதி சிவம் அடிகளார் (மெய்கண்டார் ஆதீனம் கீரிமலை) முதற் பிரதியை பெற்று கொண்டார்.
இணை இதழாசிரியர் மருத்துவர் பரா நந்தகுமார் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார் நிகழ்வுகளில் ஆசியுரை, தலைமையுரை மற்றும் சைவ வித்யா விருத்திச் சங்க தலைவர் சோ. பத்மநாதனின் சிறப்பு உரை, இணை இதழாசிரியர் சர்வா சர்வானந்தனின் உரை தமிழ்ச் சைவப் பேரவை பொதுச் செயலாளர் மருத்துவர் தி சுதர்மனின் நன்றியுரை என்பனவும் சிறப்பு பிரதிகள் வழங்கலும் அறுபத்து மூவர் மடத்தில் இடம் பெற்றது.
சைவத்தமிழ் பருவ ஏடு சைவமுரசு தமிழ்ச் சைவப் பேரவை வெளியீடாக இன்று மலர்கின்றது.
தமிழ்ச் சைவத்தை பற்றிய ஆழமான புரிதலை இலகுவான முறையில் எம் நாயன்மார் வாழ்ந்து காட்டிய வழி முறைகளோடு இளையோருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த சைவத் தமிழ் இரு திங்கள் ஏடு தமிழ்ச் சைவப் பேரவை வெளியீடாக நல்லைக் கந்தனின் பெருந்திருவிழா நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது
இறை ஆகமம் திருமந்திரம், இறை வேதம் தேவார , திருவாசகங்கள் உள்ளிட்ட சைவத் தமிழ் நூல்களில் மிக ஆழமான மெய்யியல் கருத்துக்களும் அதனைக் கடந்து வாழ்வியல் தரிசனங்களும் மிகவும் அழகாக கூறப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு பரிணாமங்களில் இந்த ஏடு வெளிகொணர உள்ளது.
ஈழத்தின் சைவத் தமிழ் வரலாற்று பொக்கிசங்கள் மீது இளையோருக்கு விழிப்புணர்வை பற்றுதலை ஏற்படுத்துவதும் இந்த சஞ்சிகையின் இன்னோர் நோக்கமாகும்.
சுருங்ககூறின் சீரிய சிவநெறிச் சிந்தனைகள் ஊடாக ஒழுக்கமிக்க அறநெறிப் பண்புடைய .வளமான சைவத் தமிழ் சமுதாயத்தை கட்டி எழுப்புவதே இந்த பருவ ஏட்டின் தூர நோக்கு ஆகும்.
அனைத்து சைவத் தமிழர்களும் இதற்கு பேராதரவு தர வேண்டும் என்பதும் குறிப்பாக எதிர்கால தலைவர்களாகிய குழந்தைகளுக்கு இதனை கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் தமிழ்ச் சைவப் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்