கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் ஆலய திருவிழாவில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கருணாரத்ன தெரிவித்தார்.
வாகனேரி திரௌபதி அம்மன் ஆலயத்தில் சடங்கு உற்சவம் இடம்பெற்று வந்த நிலையில் ஆலயத்தில் சிலருக்கிடையில் நடைபெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக கலவரம் ஏற்பட்து.
இந்த நிலையில் வாகனேரி குளத்துமடு முருகன் ஆலய வீதியினைச் சேர்ந்த நடராஜா ரமேஸ்காந்தன் (வயது 19) என்ற இளைஞர் மரணமடைந்துள்ளதுடன், நடராஜா கணேசன் (வயது 19), தியாகராஜா திலீபன் ஆகிய இருவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மற்றையவர் கிசிச்சையின் பின்னர் வீடு சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்த இளைஞனின் சடலம் பிரேத பரிதோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.
வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும், குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான கருணாரத்ன தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பிற செய்திகள்