
சிறைச்சாலையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் மோசமானதாகவே உள்ளது என்றும் , பழுதடைந்த மீன் , முட்டைகளே அங்கு கொண்டு வரப்படுகின்றன என்றும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார் .
சிறையில் இருந்து விடுதலையான பின்னர் , வெள்ளிக்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப் பிட்டுள்ளார் .
இதன்போது ரஞ்சன் ராமநாயக்க மேலும் கூறுகையில் ,
நான் சிறையில் இருக்கும் போது பலரும் என்னைப்பார்க்க வந்தனர் . அவர்கள் வரும் போது சாப்பாடும் கொண்டுவருவர் . அவர்கள் ஒவ்வொருவரையும் எனக்கு நினைவில் உள்ளது . சிறைக்கைதிக்கு சாப்பாட்டு பொதி என்பது புதையல் போன்றது . சிறைச்சாலைக்கு உணவு விநியோகிப்பர்களுக்கு கடன் வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் விநியோகத்தை நிறுத்தியுள்ளனர் .
கிட்டத்தட்ட 50 கோடி வரையில் கடன் செலுத்த வேண்டியுள்ளது .இவ்வாறான நிலைமையில் இப்போது கொண்டுவரப்படும் உணவுக்கான மீனை கொண்டு வரும் போது அதில் இருந்து புழுக்கள் விழும் . அந்த புழுக்களை ஒதுக்கிவிட்டு சமைக்கிறார்கள் .
அதேபோன்று சோறு சமைப்பவர்களின் வியர்வை அப்படியே சோற்றுக்குள் விழுகின்றது . அதனையே கொடுக்கின்றனர் . அத்துடன் களுத்துறையில் கைதிகளுக்காக பருப்பு கறி பரிமாறும் போது , கைதிகள் பருப்பை அடியில் இருந்து எடுத்துத் தருமாறு கோரிக்கை விடுத்த போது , அவ்வாறு அடியில் இருந்து எடுக்கையில் அதற்குள் இருந்து இறந்த பூனையொன்றும் இருந்துள்ளது .
அது தவறி விழுந்திருக்கும் . இந்நிலையில் குறிப்பிட்ட பிரிவு சிறைகளில் உள்ள கைதிகள் அன்றைய தினம் பூனை சொதியையே சாப்பிட்டுள்ளனர் . முட்டை கொண்டு வரும் போது , அதில் பெருமளவில் பழுதடைந்தே இருக்கும் . சிறையில் பலர் நோய் வாய்ப்பட்டுள்ளனர் .
மிகவும் ஆபத்தான நிலைமையே சிறைச்சாலைகளில் உள்ளன . அங்குள்ள உணவுகளை சாப்பிடவே முடியாது . நோய்களை கொண்டு வரும் இடமாகவே சிறைச்சாலை உள்ளது.
பிற செய்திகள்