இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் தத்தமது சொந்த நாட்டில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை எதிர்கொள்கின்றன.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இம்முறை முதல் சுற்று, சுப்பர் 4 சுற்று என்ற இரண்டு சுற்றுகளாக நடைபெறுவதால் முதல் சுற்றில் 2 போட்டிகளிலும் வெற்றிபெறுவதைக் குறியாகக் கொண்டு தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை களம் இறங்கவுள்ளது.
முதல் சுற்று நிறைவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளுக்கு மாத்திரமே சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதி பெற முடியும் என்பதால் மிகவும் கடுமையான பி குழுவில் இடம்பெறும் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு பலத்த சவால் காத்திருக்கிறது.
இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான ஆரம்பப் போட்டி கிட்டத்தட்ட நொக் அவுட்டுக்கு ஒப்பானதாகவே அமையப்போகிறது. எனவே இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வெற்றிகொள்ள கடுமையாக முயற்சிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மேலும் இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதற்கு முன்னர் தகுதிகாண் சுற்றில் விளையாடவேண்டிய இக்கட்டான நிலையில் இலங்கை இருக்கிறது. எனவே அதனையும் கருத்திக்கொண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிசிறந்த ஆற்றல்களை இலங்கை அணி வெளிப்படுத்த வேண்டிவரும்.
மேலும்,இலங்கையும் ஆப்கானிஸ்தானும் ஒரே ஒரு தடவை இருபது 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது இலங்கை வெற்றிபெற்றிருந்தது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலேயே ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்களால் இலங்கை வெற்றி கொண்டிருந்தது.
எவ்வாறாயினும் இலங்கையின் அண்மைக்கால இருபது 20 கிரிக்கெட் பெறுபேறுகள் திருப்திகரமாக இல்லை. இந்த வருடம் விளையாடிய 11 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 2 வெற்றிகளை மாத்திரம் ஈட்டிய இலங்கை மற்றொரு போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது. இந்த 3 போட்டிகளும் அவுஸ்திரேலியாவுடன் சம்பந்தப்பட்டவையாகும்.
எவ்வாறாயினும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை தனது அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் என இங்கிருந்து துபாய்க்கு புறப்படுவதற்கு முன்னர் தசுன் ஷானக்க தெரிவித்திருந்தார்.
இதேவேளை, ‘ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்து ஐக்கிய இராச்சியத்துக்கு நாங்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்’ என பானுக்க ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்
இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது உக்ரைன்!
இன்றைய தினத்திற்க்கான மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்!