
நியூயோர்க்கில் இருந்து மீண்டும் வொஷிங்டன் செல்கிறார் சுமந்திரன்
அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர்கள் குழு அடங்கலான தமிழர் தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை வொசிங்டனில் ஆரம்பமாக உள்ளது.
வொஷிங்டனில் கடந்த 14 ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தாயகத்தில் இருந்து சென்ற ஜனாதிபதி சட்டத்தரணிகளான க. கனகீஸ்வரன், எம். ஏ. சுமந்திரன் மற்றும் சட்ட நிபுணர் நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதேபோல,அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் இருந்து உலக தமிழர் பேரவையின் 06 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அமெரிக்க அரசாங்கத்தின் தரப்பில் அங்குள்ள அரசாங்க திணைக்களங்களின் இரண்டாம் நிலை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். ஆயினும்,பேச்சுவார்த்தையின் விபரங்கள் எவையும் இன்னமும் வெளிவரவில்லை. இருப்பினும், தமிழர் தரப்பு பிரதிநிதிகளுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வொஷிங்டனில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.
இதில்,அமெரிக்க அரசாங்க தரப்பில் தீர்மானம் எடுக்க வல்ல முதனிலை அதிகாரிகள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
முதல் கட்ட பேச்சு வார்த்தை முடிந்த பிற்பாடு,நியூயோர்க் சென்ற சுமந்திரன் எம். பி,இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக வோஷிங்டனுக்கு மீண்டும் புறப்பட்டு செல்கிறார்.
