
இதுவரைகாலமும் யூரியா உள்ளிட்ட செயற்கை உரங்களைப் பாவித்து வந்த எமக்கு தற்போதைய நிலையில் ஒரு ஏக்கருக்கு நைதரசன் எண்ணை ஒரு லீற்றர், பொட்டாசியம் 24 கிலோ, தந்துள்ளார்கள்.
இன்னும் பசளை எண்ணெய்ஒரு லீற்றர் தருவதாகச் கூறியுள்ளார்கள். எமக்குத் தந்துள்ள நைதரன் எண்ணையில் அரை லீற்றருக்கு5 கிலோ மண்ணில் கலந்து இரண்டு தடவைகள் விசிறும்படி தெரிவித்துள்ளார்கள். இது எமக்குப் புதிய விடையமாகும்.
இதனை இம்முறை பாவித்துப் விளைச்சலைப் பார்த்தால்தான் தெரியும் .நோய்க்கு வைத்தியரிடம் சென்றால் மாத்திரைகள் எடுத்து அதனை பாவித்த பின்னர்தான் நோய் தீர்ந்ததா ?இல்லையா ?என்பது பற்றி கூறமுடியும்.
அதேபோன்றுதான் எங்களுடைய நிலைமையும் என மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பகுதியின் பாலையடிவட்டை சரஸ்வதி விவசாய அமைப்பைச் சேர்ந்த பேரின்பம் ஜீவரெத்தினம் தெரிவிக்கின்றார்.
இவ்விடையம் தொடர்பில் வெள்ளிக்கிழமை(19) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….”இந்த இயற்கை பசளை மற்றும் எண்ணை வகைகளைப் பயன்படுதி வருகின்றோம் ஆனாலும் அது இதுவரையில் பயிரில் எதுவித முன்னேற்றத்தையும் காட்டியதாகத் தெரியவில்லை.
இதனை ஏனைய விவசாயிகள் ஏனைய பகுதியில் பயன்படுத்தியுள்ளார்கள் அது பயிருக்கு தகுந்த வீரியத்தைக் கொடுத்ததாக தெரியல்லை எனக் கூறுகின்றார்கள். களி பூமி என்றாலும் பரவாயில்லை. எமது பகுதி மணல் தரைப் பகுதியாகும்.
இவ்வாறான நிலத்திற்கு இவ்வாறு நாம் பாவித்து வந்த செயற்கை உர வகைகளைத் தடுத்து நிறுத்தி ,இயற்கை உரத்தைப் பாவிக்கச் சொல்லியிருப்பதானது எதிர்காலத்தில் சோமாலியா போன்றதொரு நிலைவரும் என எண்ணுகின்றேன்.
ஒருவர் ஒரு ஏக்கர் வேளாண்மை செய்தால் அதில் அரை ஏக்கருக்கு இயற்கை மருந்துகளையும், மற்றைய அரை ஏக்கருக்கு செயற்கை மருந்துகளையும் பாவிக்குமாறு அரசாங்கம் கூறியிருக்குமானால் அது ஓரளவுக்கேனும் தாக்குப் பிடித்திருக்கும் என நினைக்கின்றேன்.
ஆனால் ,திடீரென அனைத்தையும் நிறுத்தியதனால் விவசாயிகள் மிகுந்த நட்டத்தைப் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
நாங்களும் எங்களிடமிருந்த முதலீடுகளைச் செலவு செய்து எமது பரம்பரை வாழ்வாதாரத்தை மேற்கொண்டுள்ளோம் .அது இம்முறையில் வெற்றியளித்தால் மிகவும் வரவேற்பாக இருக்கும். அதனைப் பொ றுத்திருந்ததான் பார்க்க வேண்டும் என்றார்.