
முஸ்லிம்கள் தொடர்பாக அடிமனதில் கொண்டிருக்கின்ற காழ்ப்புணர்ச்சியையே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் திலீபன் எம். பி கக்கி உள்ளார் என்று சுகாதார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.வியாழக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் திலீபன் எம். பி உரையாற்றியபோது,முஹமட் சாணக்கியன் என்று சாணக்கியன் எம். பியை விளிக்க கையாண்டார்.
இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நிந்தவூரில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய ஹசன் அலி, மேலும் கூறியதாவது;அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு முஸ்லிம் மக்களின் வாக்குகளில் பாராளுமன்றத்துக்கு வந்த முஸ்லிம் எம். பிகள் ,கண் இருந்தும் குருடர்களாக, காது இருந்தும் செவிடர்களாக, வாய் இருந்தும் ஊமைகளாக நடந்து அரசாங்கத்தோடு ஒட்டி கொண்டு நிற்கின்றனர்.
இந்நிலையில்,முஸ்லிம்களை இலக்கு வைத்த அரசாங்கத்தின் அநியாயங்களுக்கு எதிராக தமிழ் எம். பிகள் குரல் கொடுத்து வருவது முஸ்லிம் மக்களுக்கு பெரிய ஆறுதலை தருகின்றது.தமிழ் பேசும் உறவுகள் என்ற வகையில் சாணக்கியன், சுமந்திரன், மனோ கணேசன் ஆகியோர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து முஸ்லிம் எம். பிகள் எம்முடன் இல்லாத இடைவெளியை நிரப்பி வருகின்றனர்.
சாணக்கியன் எம். பி இதய சுத்தியுடன் முஸ்லிம் மக்களுக்காக முன்னின்று குரல் கொடுத்து வருகின்றார். வாக்கு எடுக்கும் நோக்கம் இவருக்கு கிடையாது.இவருக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு கிடைத்து உள்ளது.
தமிழ் , முஸ்லிம் உறவுகள் புதிய பொலிவு பெற வேண்டும் என்று மிக நீண்ட காலமாக வலியுறுத்து வருபவன் நான். சாணக்கியன் எம். பியின் அணுகுமுறை எம் போன்றவர்களுக்கு புதிய உத்வேகத்தை தந்து நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறான ஒரு தருணத்தில் திலிபன் எம். பியின் உரை எமக்கு பேரதிர்ச்சியையும், கவலையையும், அருவருப்பையும் தந்து உள்ளது. ஏனென்றால்,முஸ்லிம்கள் குறித்து அவரின் மனதில் உள்ள காழ்ப்புணர்ச்சியையே கக்கி உள்ளார்.
எமது இறுதி தூதுவர் நபிகள் நாயகத்தின் பெயரை அவர் மலினப்படுத்தியும் உள்ளார். நாம் இவரை வன்மையாக கண்டிக்கின்றோம்.
