குப்பைகளால் நிரம்பி வழியும் பாலாவி – கற்பிட்டி பிரதான வீதி!

புத்தளம், பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியோரங்களில் கழிவுப் பொருட்களை கொட்டுவதால் சூழல் மாசடைவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாலாவி முதல் கற்பிட்டி பிரதான வீதியின் பாலாவி பெரிய பாலம், மாம்புரி, கண்டல்குழி மற்றும் பள்ளிவாசல்துறை உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு பிரதான வீதியோரங்களில் இனந்தெரியாதோரால் கழிவுப் பொருட்களை கொட்டப்படுவதாக அந்தப் பிரதேச மக்களும் , பயணிகளும் குறிப்பிடுகின்றனர்.

அதாவது,வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்கள், இறைச்சிக் கடைகளில் சேகரிக்கப்படும் கரிவுப் பொருட்கள், சலூன் கடைகளில் சேகரிக்கப்படும் முடிகள் மற்றும் சிறுவர்களின் பம்பஸ், முக கவசங்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் இவ்வாறு பிரதான வீதியோரங்களில் காணப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இதனால் வீதியோரங்களில் ஒரு வித துர்நாற்றம் வீசுவதாகவும், போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் பொதுமக்களும், பயணிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.

வீதியோரங்களில் குப்பைகளை கொட்டாதீர்கள், சுற்றுப் புறச் சூழலை பாதுகாப்பாக வைத்திருங்கள் என இது போன்ற பல வாசகங்கள் பிரதான வீதியோரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இவ்வாறு கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் சுற்றுலா மையங்களில் கற்பிட்டி பிரதேசமும் ஒன்றாக காணப்படுகின்ற போதிலும் இவ்வாறு வீதியோரங்களில் குப்பைகள், மிருகங்களின் கழிவுகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை கொட்டுவதால் சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் கற்பிட்டி பிரதேச சபை உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், முக்கிய இடங்களில் பாதுகாப்பு கமராக்களை பொருத்தி சூழல் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை இன்றி செயற்படுவோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *