இலந்தையடி கடலரிப்பால் காணாமல் போகும் நிலங்களும், மரங்களும்!(படங்கள் இணைப்பு)

கற்பிட்டி, நுரைச்சோலை – இலந்தையடி பகுதியிலுள்ள கடற்கரையின் கரையோரப் பகுதிகள் கடலரிப்பினால் பாரிய இயற்கை அழிவுகளை எதிர்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

கற்பிட்டி பிரதேச சபைக்குற்பட்ட நுரைச்சோலை – இலந்தையடி கடற்பிரதேசத்தில் சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் வரையிலான கடற்பகுதி இவ்வாறு கடலரிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால், மீன்பிடி படகுகள், வாடிகள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்கள் என்பனவும் இந்த கடலரிப்பினால் பெரும் பாதிப்பை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

அத்தோடு, கரையோரப் பகுதிகளில் மீன்பிடிப் படகுகளையும் நிறுத்தி வைக்க முடியாத சூழ்நிலையும் காணப்படுவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேற்படி கடலரிப்பைத் தடுப்பதற்காக கரையோரப் பகுதிகளில் பாரிய கற்கள் போடப்பட்டுள்ள போதிலும், கடலைப்பின் தீவிரம் இதுவரை குறையவில்லை எனவும் இந்தப் பகுதியில் வாழும் மக்களும், மீனவர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், சுனாமியிலிருந்து பாதுகாப்பை பெறுவதற்காகவும், கற்பிட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும் முன்னோர்களால் இலந்தையடி கடற்கரையோரப் பகுதிகளில் பாரிய அளவில் சவுக்கு மரங்கள் நடப்பட்ட போதிலும் மேற்படி கடலரிப்பினால் அந்த சவுக்கு மரங்களும் சரிந்து கீழே வீழ்ந்து கிடப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் சுற்றுலா வலயங்களில் கற்பிட்டி பகுதியும் முக்கிய இடத்தை வகிப்பதால், இவ்வாறு நுரைச்சோலை, இலந்தையடி மற்றும் ஆலங்குடா ஆகிய பகுதிகளுக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இலந்தையடி கரையோரப் பகுதிகளில் நாட்டப்பட்டுள்ள சவுக்கு மரங்களை பார்வையிடுவதற்கும், அங்கு குடும்பத்துடன் வருகை தந்து பொழுதை கழிப்பதற்கும் நாளாந்தம் நூற்றுக்கணக்கான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த போதிலும் தற்பொழுது அவர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்படுவதாகவும் அந்த பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கரையோரப் பகுதிகளில் கடலரிப்பைத் தடுப்பதற்காக பல மில்லியன் ரூபா பணத்தை செலவு செய்யும் அரசாங்கம், அதனை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும் முயற்சிக்க வேண்டும் எனவும் மக்கள் கூறுகின்றனர்.

எனவே, நுரைச்சோலை – இலந்தையடி பகுதியில் தீவிரமடையும் கடலரிப்பை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மீனவர்களும், பொதுமக்களும், இந்தப் பகுதிக்கு சுற்றுலா வரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *