கள்ள ஓட்டு சிறிதரன் கல்வி பற்றி பேசுவதா? வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் அவரது கொடும்பாவியும் எரியூட்டப்பட்டது.

கடந்தவாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்கும், யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது திலீபன் கல்வி அறிவற்றவர் என்று சிறிதரனால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த கருத்துக்கு எதிராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களால் வவுனியா நகரில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று (20) முன்னெடுப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது,

திலீபன் எம்பி பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை வன்னிமக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
கூட்டமைப்பினர் 22 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை வைத்திருந்தபோதும் எதுவும் செய்யவில்லை. 18 வைத்திருந்தும் ஒன்றும் செய்யவில்லை. இனிமேலும் எதுவும் செய்யப்போவதில்லை.

அவர்கள் தமிழ்மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல், தீர்க்கவிரும்பாமல் அவர்களின் பிரச்சினைகளை மாத்திரம் காட்டி வாக்குகளுக்காக தமிழ்மக்களை அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்கின்றனர். அவர்கள் தமிழ்மக்களையும் கல்வியறிவு பற்றிப்பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள்.

ஆனால் வன்னியில் வெற்றிபெற்று ஒருவருடத்தில் திலீபன் எம்பி பல்வேறு மாற்றங்களையும், அபிவிருத்திப் பணிகளையும் செய்துள்ளார்.

அவர்மீது அவ்வாறான விமர்சனத்தை முன்வைத்தமைக்கு நாங்கள் வன்மையான கண்டணங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்- என்றனர்.

குறித்த பேரணி வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பமாகி கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடைந்து அங்கு சிறிதரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கள்ள ஓட்டு சிறிதரனே கல்வி பற்றிபேசாதே, உன்பிரதேச வாதத்தை மறக்கவில்லை, தமிழர்களை விற்றுப்பிழைப்பதை நிறுத்து, முகநூலில் மோதாமல் நேரிலே மோதிப்பார் ஆகிய வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *