
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீபமேற்றும் பிரதான பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.
அது உடைக்கப்பட்டுள்ளதனை துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவின் பொருளாளரும் மன்னார் நகரசபை தலைவருமாகிய அன்ரனி டேவிற்சனும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனும் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்தினர்.
இதேவேளை, இந்தச்செயற்பாடு, அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான செயல் என மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
துயிலுமில்ல நுளைவாயிலுக்கு அருகில் இராணுவம் உள்ளபோது அதை யார் உடைத்திருக்க முடியும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
பல வருடங்களாக இருந்த தீபமேற்றும் பிரதான பீடத்தை சற்றும் மனிதாபிமானம் இன்றி மிலேச்சத்தனமான முறையில் உடைத்து அழிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
அதை அழிப்பதன் ஊடாக அரசு சிற்றின்பமடையலாம். தமிழ் மக்களின் மனங்களில் அனுதினமும் தியாகச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கும் எமது விடுதலை வீரர்களின் தியாகத்தையோ இலட்சிய வேட்கையையோ அரசால் சிதைத்து விட முடியாது என்பதை குறித்த கேவலமான செயலில் ஈடுபடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். – என்று சிவகரன் மேலும் தெரிவித்தார்.
தீபமேற்றும் பிரதான பீடம் உடைக்கப்பட்டமை மாவீரர் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.