வவுனியா பொலிசாரால் 21 வயது இளைஞர் ஒருவர் கைது!

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில்,வவுனியா, பண்டாரிக்குளம், திருவள்ளுவர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 22 ஆம் திகதி பிறந்த தின நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்காக வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்ட நகையினை குறித்த வீட்டார் எடுத்துச் சென்றுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை பகல்வேளை குறித்த நகையினை வீட்டில் வைத்து விட்டு வீட்டார் வவுனியா நகருக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் பின்கதவு திறக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டு அலுமாரிகளும் திறக்கப்பட்டிருந்தன.

வீட்டு அலுமாரிகளை பார்வையிட்ட போது அதில் இருந்த பூட்டுகாப்பு, மோதிரம், தோடு, பென்ரன் உள்ளிட்ட 5 அரைப் பவுண் நகைகளை காணவில்லை.

இதனையடுத்து வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் அஹமட், பொலிஸ் சார்ஜன்டுகளான திசநாயக்கா (37348), விக்கிரமசூரிய (36099), ஜயரத்ன (35436), திலீப் (61461), பொலிஸ் கொன்டபிள்களான தயாளன் (91792), சந்தரூவான் (31043), ஹெடிஆராச்சி (99559) உள்ளடங்கிய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து 9 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு அடைவு வைக்கப்பட்ட நிலையில் 5 அரைப் பவுண் நகையும் மீட்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *