புத்தளம் – கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணெய் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிடுகின்றனர்.
அதாவது,கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றால் தமது மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மண்ணண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் பிரச்சினையால் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கற்பிட்டி மற்றும் கண்டல்குழி மீனவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில்,பெருங்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு நாளாந்தம் நூறு லீற்றர் வரையும், சிறுகடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு நாளாந்தல் 20 லீற்றர் முதல் 25 லீற்றர் வரையும் மண்ணெண்ணெய் தேவைப்படுவதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், மீனவர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதாகவும் இது தமது மீன்பிடித் தொழிலுக்கு போதாது என்றும் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மீன்பிடி படகுகளுக்கு மண்ணெண்ணெய் இன்மையால், ஒரு சில மீனவர்கள் வள்ளங்களைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலுக்கு செல்வதாகவும் கூறுகின்றனர்.
இதனால், பெரும் காற்று விசும் போது வள்ளங்களை இயக்குவதில் தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன், உயிர் ஆபத்துக்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களும் காணப்படுவதாகவும் மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், அவை தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமே போதுமானதாகும் எனவும் விற்பனை செய்யும் அளவுக்கு மீனகள் பிடிபடுவதில்லை எனவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மாதக் கணக்கில் மண்ணெண்ணெய் இன்மையால் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடனுக்கு பெற்ற இயந்திர படகுகள், என்ஜின்கள் மற்றும் வலைகள் என்பனவற்றுக்கு தவணைப் பணம் மற்றும் கடன் என்பனவற்றை செலுதத் முடியாத நிலையில் உள்ளதாகவும், இருக்கும் கடன்களை விடவும் மேலும் கடனாளிகளாக மாறும் நிலையும் காணப்படுவதாகவும் கற்பிட்டி, கண்டல்குழி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக கவனம் செலுத்துவதுடன், மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொடுக்கவும், மீனவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.


பிற செய்திகள்