
யாழ்ப்பாண நீதிமன்ற ஆளுகைப்பகுதி மற்றும் கிளிநொச்சி நீதிமன்ற ஆளுகைப் பகுதிக்குள் மாவீரர்நாள் நிகழ்வை நடத்த குறித்த இரண்டு நீதிமன்றங்களும் தடை விதித்துள்ளன.
யாழ்ப்பாண நீதிமன்ற ஆளுகைப்பிரிவில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சார்பில் மனுக்கள் நேற்றுச் சமர்ப்பிக்கப்பட்டன.
முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலிலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய எல்லையிலும் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அந்த மனுவில் கூறப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் பொலிஸார் கோரினர்.
இந்த மனு யாழ்ப்பாண நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி. சிவலிங்கம் முன்பாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போதே, நாளை 21ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 28ஆம் திகதிவரை ஒரு வாரத்துக்கு மாவீரர் நாள் நிகழ்வு நடத்த நீதிமன்று தடை உத்தரவு விதித்தது.
இதேவேளை,
கிளிநொச்சி மாவட்டத்தில், மாவீரர்நாள் நினைவேந்தலில் ஈடுபட 51 பேருக்கு கிளிநொச்சி நீதிமன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிளிநொச்சி பொலிஸார் 9 பேருக்கு எதிராகவும், தர்மபுரம் பொலிஸார் 02 பேருக்கு எதிராகவும், அக்கராயன் பொலிஸார் 02 பேருக்கு எதிராகவும், பளை பொலிஸார் 18 பேருக்கு எதிராகவும், முழங்காவில் பொலிஸார் 04 பேருக்கு எதிராகவும், மருதங்கேணி பொலிஸார் 09 பேருக்கு எதிராகவும், பூநகரி பொலிஸார் 07 பேருக்கு எதிராகவும், தடையுத்தரவுகள் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.