சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று; சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்கள்!

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று செவ்வாய்க்கிழமை, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் மூலம் தமக்கான நீதி வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் வடக்கு – கிழக்கின் 8 மாவட்டங்களிலும் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் இறுதிக்கப்பட்டப்போரின்போது காணாமலாக்கப்பட்ட தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் பல வருடங்களாகத் தொடர்ச்சியாகக் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய வகையில் மாபெரும் போராட்டங்கள் நடாத்தப்பட்டிருக்கின்றன.

அதன்படி இன்று செவ்வாய்கிழமை வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய 5 மாவட்டங்களிலும் கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களிலும் கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்தார்.

வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதுடன் அவ்விசாரணைகள் மூலம் தமக்கான நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என்று வலியுறுத்தியும் இனி வருங்காலங்களில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளகப்பொறிமுறைகள் எவற்றையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சுட்டிக்காட்டியுமே இக்கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் கவனயீர்ப்புப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் (29) 2000 நாட்கள் பூர்த்தியடைந்துள்ளது.

எனவே அதனுடன் இணைந்ததாக வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையும் முன்னிட்டு இன்று முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் ஏனைய போராட்டங்களை விடவும் விசேடமானதாக அமையும் என்றும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்தார்.

அதன்படி முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாகவும், யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாகவும், வவுனியாவில் குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவும், திருகோணமலையில் பிரதேச செயலகம் முன்பாகவும் ஏனைய மாவட்டங்களில் வழமையான இடங்களிலும் இன்றைய தினம் மேற்படி கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *