தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற டக்ளஸின் அறைகூவலுக்கு மாற்றுக் கட்சியினர் ஆதரவு

யாழ்ப்பாணம், ஓக. 30: வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் தரப்புகளை ஒன்றிணைத்து இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இதற்காக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்த பகிரங்க அழைப்புக்கு மாற்றுக் கட்சியினர் இடையே குறிப்பாக மாற்றுக் கட்சியின் இடைநிலை தலைவர்கள், உறுப்பினர்கள் இடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய இடை நிலைத் தலைவர் ஒருவர் எம்மிடம் கூறுகையில் “கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளின் தீர்வுக்கான தொடக்கமாக, 13 ஆம் திருத்த சட்டத்தை டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்திவருகிறார். அவரால் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தப்பட்டு வந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தை பிற கட்சிகள் வலுப்படுத்தி இருந்தால் பெரிய அழிவுகளை தடுத்திருக்க முடியும். இறுதி போரில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பை தடுத்திருக்க முடியும். ஆனால், தமிழ் அரசுக் கட்சி உள்பட பெரும்பாலான தமிழ் கட்சிகள் இந்த விவகாரத்தில் டக்ளஸ் தேவானந்தாவை எள்ளி நகையாடின. அவரையும் அவருடன் பக்க பலமாக நின்ற தோழர்கள் மீதும், இந்த கட்சிகளின் ஆதரவுடன் தான் புலிகள் கொலைவெறித் தாக்குதலை நடத்தினர். இறுதியில், 13 ஆம் திருத்த சட்டத்தை அமல்படுத்த இந்தியா உறுதுணையாக இருக்க வேண்டும் எனக்கோரி, இந்த தமிழ் கட்சிகள் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன. எனது கட்சிக்கு காலம் கடந்து கிடைத்த ஞானத்தை நான் வரவேற்கிறேன். இந்நிலையில், வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் தரப்புகளை ஒன்றிணைத்து இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை தனிப்பட்ட முறையில் நான் வரவேற்கிறேன். எமது கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்குமோ தெரியவில்லை. ஆனால், இனியும் அழிவுகளுக்கு இடம் கொடுக்காது, தமிழ் கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டும்.எமது கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இந்த எண்ணத்தில்தான் உள்ளனர் என்றார் அவர்.

இது தொடர்பாக ரெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கூறுகையில் ” நாட்டில் நிலவும் தற்போதைய சூழலை பயன்படுத்தி, தமிழ் தரப்புகள் ஒன்றிணைந்து, ஜனாதிபதியுடன் பேச வேண்டும். இது தொடர்பாக, அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை தமிழ் கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். எமது கட்சிக்குள் பலரின் நிலைப்பாடும் அதுதான். அழிவு அரசியல் போதும் என்றார் அவர்.

இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய தலைவர் ஒருவர் கூறுகையில் ” எனது பெயரைக் கூறி டக்ளஸின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறவேண்டும். அதுதான் முறை, ஆனால், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்காக எனது பெயரை இப்போது பயன்படுத்த வேண்டாம். ஆனால், ஒரு விஷயம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கோடிக்கணக்கான சொத்துக்களின் அதிபதி. கொழும்பில் மட்டும் அவரிடம் சுமார் 5000 கோடி பெறுமதியான சொத்துக்கள் உள்ளன. கொழும்பில் செல்வந்த குடுமப்த்தில் பிறந்து வளர்ந்த அவரால், வடக்கு கிழக்கில் உள்ள அப்பாவி தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த பிரச்சினைகளை அவருக்கு புரிய வைக்கப்போய் நாங்கள் தோற்றுப் போயுள்ளோம். மணிவண்ணன் பிரிந்து சென்றது கூட அப்படிதான்.

இன்னொரு மாபெரும் அழிவுக்கான காய் நகர்த்தல்களை தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்கிறார். தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அரசுடன் பேச வேண்டும் என்ற டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை, எமது கட்சித் தலைமை நிச்சயமாக உதாசீனம் செய்யும். அவரை எள்ளி நகையாடும். ஆனால், கட்சிக்குள் உள்ள இடைநிலை தலைவர்கள் பலரும் இந்த விவகாரத்தில் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த விவகாரத்தில் கட்சி உடைந்தாலும் உடையலாம் என்றார்.

முன்னதாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ்க் கட்சிகள் தமக்கிடையே ஒருமித்ததொரு நிலைப்பாட்டுக்கு வந்து, அந்த நிலைப்பாட்டை ஏகமனதாக அரசிடம் சமர்ப்பிக்க முன் வர வேண்டும் என்று அரசின் மூத்த அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *