
கொழும்பு, ஒக். 30: நிதியமைச்சராகவும் பணியாற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை இடைக்கால பாதீட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள இந்த இடைக்காலப் பாதீட்டுக்கு ரூ. 4672 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பிற்பகல் 2 மணிவரை நிதியமைச்சரின் பாதீட்டு உரை இடம்பெறும்.
இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், நாளை முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் நடைபெறும்.
இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் இடைக்கால பாதீட்டு திட்டம் எதிர்வரும் 04 மாதங்களுக்கு அமலுக்கு வரும் வகையில் சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த பாதீட்டில், பொதுநிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிகளவாக, ரூ. 735 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நிதி மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டு அமைச்சுக்கு 467 பில்லியன் ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்கு 376 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட பாதீட்டில் மொத்த செலவீனமானது 3,899 பில்லியன் ரூபாவாகும்.
இதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாதீட்டை விட 773 பில்லியன் ரூபா மேலதிக தொகையாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.