
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பண்டாரிக்குளம், பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 22 ஆம் திகதி பிறந்த தின நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த வீட்டவர்கள் வங்கியிலிருந்து நகையினை எடுத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை பகல்வேளை குறித்த நகையினை வீட்டில் வைத்து விட்டு வீட்டார் வவுனியா நகருக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் பின்கதவு திறக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டு அலுமாரிகளும் திறக்கப்பட்டிருந்தன.
வீட்டு அலுமாரிகளை பார்வையிட்ட போது அதில் இருந்த நகைகளை காணவில்லை.
இதனையடுத்து வீட்டு உரிமையாளர் வவுனியா காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து 9 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு அடைவு வைக்கப்பட்ட நிலையில் 5 அரைப் பவுண் நகையும் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.