யாழில் சீனர்களின் கடல் அட்டை பண்ணை – அனுமதி கொடுத்தது யார்? கடற்றொழிலாளர்கள் கேள்வி

யாழ்ப்பாணம் – புங்குடுதீவுப் பகுதியில் சீன கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசன தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீன நாட்டவர்கள் யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியில் கடல் அட்டைப் பண்ணை அமைப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் அந்தப் பகுதியில் உள்ள கடல் தொழிலார்களை நான் கேட்ட போது, இரண்டு தடவைகள் குறித்த பகுதிக்கு சீனர்கள் வந்து இடங்களை அவதானித்துச் சென்றதாக அறியமுடிகிறது.

இது தொடர்பில் தெளிவான தகவல்களை எமக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுள்ளோம்.

யாழ் மாவட்டத்தில் கடல் அட்டை பண்ணைகளை மட்டுப்படுத்த வேண்டும். அரியாலையில் சீன நாட்டின் அட்டைப் பண்ணை உள்ளது. ஆனால், அங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

எமது மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு எரிபொருள் தேவையாக உள்ளது. இப்போது ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதில் இரண்டு பிரச்சினைகள் உள்ளது. சீராக எரிபொருள் கிடைக்க வேண்டும். அத்துடன் மானிய விலையில் 150 ரூபா வீதம் எமக்கு எரிபொருள் கிடைக்க வேண்டும்.

இது தொடர்பில் கடல் தொழில் அமைச்சரை நாம் கேட்ட போது கடல் தொழிளாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் இல்லை. எமக்கு ஏற்கனவே மானிய முறையில் எரிபொருள் வழங்கும் நடைமுறை உள்ளது. அதனை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *