
கொழும்பு, ஓக 31
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்திவந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது அதே சட்டத்தை கையில் எடுத்துள்ளார். போராட்டக்காரர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது. இதன் தாக்கம் ஜெனிவா தொடரில் எதிரொலிக்கும். இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இடைக்கால வரவு – செலவு திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
காகத்தின் கூட்டில்தான் குயில் முட்டையிடும். சிறிதாக இருக்கும்போது, குயிலும் காகம்போல இருக்கும். வளர, வளரதான் பிரச்சினை ஆரம்பமாகும். குயில் விரட்டியடிக்கப்படும். மொட்டு கட்சி ஆட்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள பாதீடும், காகத்தின் கூட்டியில் குயில் முட்டை கதைபோல்தான். பாரிய ஆபத்து காத்திருக்கின்றது.
தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே மொட்டு கட்சி ஜனாதிபதியை பயன்படுத்துகின்றது. அவரின் சில திட்டங்களுக்கும் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் தருணம்வரும்போது வேலையைக் காட்டுவார்கள்.
நாட்டு பொருளாதாரத்தை ராஜபக்சக்கள் சீரழித்துவிட்டனர். ஒருவரிடம் ஒரு லட்சம் சேமிப்பு இருந்தால் அதன் தற்போதைய பெறுமதி 30 ஆயிரம் ரூபாதான். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கைதியாகவே ஜனாதிபதி இருக்கின்றார் என்றார்.