20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு அறிவிப்பு

நாட்டில் உள்ள 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு நாளை காலை 7 மணிவரை செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பு, திருகோணமலை, அனுராதபுரம், புத்தளம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, குருநாகல், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, மொனராகலை, களுத்துறை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால் மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் மற்றும் ஆற்றுப்படுகைகளுக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அந்த திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், அவசர உதவிக்காக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *