நெல் அறுவடைக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்குமாறு புத்தளம் பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மணல்தீவு, சிராம்பியடி, பொத்துவில், நெளும்வெவ, தம்பண்ணாவ, அட்டவில்லு மத்தி மற்றும் கல்லடி ஆகிய கிராம சேவகர் பிரிவில் இவ்வாறு அதிகளவில் நெல் செய்கை மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில், நெல் அறுவடை செய்யக் கூடிய காலம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நெல் அறுவடைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்திற்குரிய டீசல் இன்மையால் தாம் அவதிப்படுவதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
ஒரு ஏக்கரில் நெல் அறுவடை செய்வதற்கு 10 முதல் 15 லீற்றர் டீசல் தேவைப்படுவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று விவசாய நடவடிக்கைகளுக்காக எரிபொருள் கேட்டால், QR குறியீடுகளுக்கு மாத்திரம் டீசல் வழங்க முடியும் எனவும் கொள்கலன்களில் எரிபொருள் வழங்க முடியாது என்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் தெவிக்கின்றனர் என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுபற்றி பிரதேச செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் இதுவரை தமக்கு எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என புத்தளம் மாவட்ட வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வேளாண்மை செய்கை ஆரம்பிக்கப்பட்ட போது, வயல் நிலங்களை உழுதுவதற்கு, உழவு இயந்திரங்களுக்கு டீசல் இன்றி அதிக விலை கொடுத்து டீசல் பெற்றுக்கொண்டதாக தெரிவித்த விவசாயிகள், அதன் பின்னர் உரப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்ததாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பல இன்னல்களை எதிர்கொண்டு நெல் அறுவடை செய்யும் காலத்தில் இப்போது அறுவடை செய்யும் இயந்திரத்திற்கு டீசல் இன்மையால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
அதிக கடன்களை பெற்று இவ்வாறு வேளாண்மை செய்கையை மேற்கொள்ளும் தமக்கு உரிய காலத்தில் அறுவடை செய்ய முடியாமல் போனால் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகள் பராமுகமாக இருப்பது வேதனையளிப்பதாக கூறும் விவசாயிகள், நெல் அறுவடைக்குத் தேவையான எரிபொருளை உடனடியாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.


பிற செய்திகள்